கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

rains-7

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் கடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் அவ்வப்போது மழை பெய்கிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்தநிலையில், மேலும் 2 நாள்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய துணைத் தலைவர் எஸ்.பி.தம்பி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் சனிக்கிழமை (நவ.4) பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 140 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு, நாகபட்டினம் ஆகிய இடங்களில் தலா 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சற்று வலு குறைந்து, காற்றழுத்தத் தாழ்வுநிலையாக மாறியுள்ளது. இது தற்போது, தென்மேற்கு வங்கக் கடலில் மன்னார் வளைகுடாவில் இருந்து, தமிழகத்தின் வட கடலோர பகுதிகள் வரை பரவியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.

தென் மாவட்டங்களிலும்… தென் மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மீனவர்கள் தமிழக கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வரும் நாள்களில் மழை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார் எஸ்.பி.தம்பி.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் (மில்லி மீட்டரில்): பாபநாசம்- 140; திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, நாகப்பட்டினம் 120; காரைக்கால்- 110; திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாங்குநேரி, கடலூர்- 90; பரங்கிப்பேட்டை, அம்பாசமுத்திரம், திருவாரூர்- 70.