மீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய்

மீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவு மீண்டும் சரிந்தது.

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.

இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.இன்று காலை நேர வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது. இது வரலாற்றில் இல்லாத சரிவாகும்.

ஈரான் கச்சா எண்ணெய் விற்க அமெரிக்கா விதித்துள்ள தடையின் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.

இதுபோலவே பல நாடுகளின் நாணயங்களும் சரிவை சந்தித்து வருவதால் ஆசிய பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சி கண்டன. இதனால் முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை பெரிய அளவில் விற்பனை செய்ததால் அதன் தாக்கமும் இந்திய ரூபாய் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதுபோன்ற காரணங்களால் பெரும் சரிவை சந்தித்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.