அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அக்.1 முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அக்.1 முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அக்.1 முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15 ஆயிரமாகவும் அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மத்திய ஊதிய குழு திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் பொழுதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும் போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிநிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனதுப ரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது.

இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக் கொண்ட காலஅளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழு தான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டுவர வழிவகுத்துள்ளது.

இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்து, இன்று (11.10.2017) எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.

தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர்/ ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலத்தின் நிதிநிலையையும், அதேசமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப் பயனுடனும் அமல்படுத்தஆணையிட்டுள்ளேன்.

இதன்படி, தற்போது உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100/- மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.77,000 /- என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700/- மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், முந்தைய ஊதியக் குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான உயர்வைவிட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியை பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850/- என்றும், அதிகபட்ச ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500/- மற்றும் ரூ.67,500/- என்றும் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்புகாலமுறை ஊதியம் பெற்று வரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.3000/- ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100/- ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ளப ணியாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரெண்டு லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு இலட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்கான ஆணைகளை விரைவில் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.